கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.
வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads
இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது.
கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நேற்று காலை சுமார் 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த போதும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படாததால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியும், சிலர் குடைகளுடனும் பள்ளி, கல்லூரிகளுக்கு சிரமத்துடன் சென்றனர்.
மழையால் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் சிரமமடைந்தனர்.
மேலும், அதிகளவில் குளிர்காற்று வீசுவதால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பலருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஓசூர், சூளகிரி, போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
விவசாயிகள், சிறு வியாபாரிகள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். விவசாயிகள் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வர முடியாமலும், பூக்களை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாமலும் சிரமமடைந்தனர்.
குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி
நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 21.2 மிமீ மழை பதிவாகியிருந்தது. இதேபோல் ராயக்கோட்டை-17 மிமீ., போச்சம்பள்ளி-13.8 மிமீ., பாரூர்-12 மிமீ., பெனுகொண்டாபுரம்-10.2 மிமீ., நெடுங்கல்-9 மிமீ., அஞ்செட்டி-5.4 மிமீ., சூளகிரி-5 மிமீ., தேன்கனிக்கோட்டை-3.6 மிமீ., கிருஷ்ணகிரி-3.6 மிமீ., ஓசூர்-2.2 மிமீ என மொத்தம் 103 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு 753 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 177 கனஅடியும், தென்பெண்ணை ஆற்றில் 705 கனஅடி தண்ணீர் என 882 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல்
ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், 41 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 580 கனஅடி தண்ணீர், முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment